ஈழ தமிழர்: பிரதமர், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்

இந்த கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வழங்கினார்.
இந்த கடிதத்தின் நகலை காங்கிரஸ் தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் சந்தித்து கொடுத்தார்.
அந்த கடிதத்தில், இலங்கையில் வன்னி முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு உடனடியாக மறுவாழ்வு அளிக்க வேண்டும். தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிப்பது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
திருக்குவளையில் கருணாநிதி
இந் நிலையில் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தனது மூதாதையர் இல்லத்திற்கு முதல்வர் கருணாநிதி விஜயம் செய்தார்.
திருவாரூரில் தொடங்கப்பட்டுள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள திருவாரூர் வந்த முதல்வர் கருணாநிதி இன்று முற்பகல் திருக்குவளைக்குச் சென்றார். முதல்வர் பிறந்த ஊர் இது.
அங்குள்ள தனது மூதாதையர் வசித்த வீட்டுக்குச் சென்ற அவர் அங்கு தங்கினார். அவருடன் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி உள்ளிட்டோரும் சென்றனர்.
தான் சிறு வயதில் வாழ்ந்த, வளர்ந்த வீட்டில் அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டார் முதல்வர்.
முதல்வர் வருகையைத் தொடர்ந்து அவரது பால்யகால நண்பர்களான தண்டபாணி, தியாகராஜன், நடராஜன் ஆகியோர் முதல்வரை வந்து சந்தித்து அளவளாவினர்.
மூதாதையர் வீட்டில் பழைய நினைவுகளுடன் செலவிட்ட பின்னர் முதல்வர் கருணாநிதி அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டார்.
காதி பயன்படுத்துங்கள்-கருணாநிதி:
இதற்கிடையே நாளை காந்தி ஜெயந்தியையொட்டி முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்,
மகாத்மா காந்தியின் பிறந்த நாளைப் பயன்படுத்தி காதி பொருட்களை அதிக அளவில் பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்க்கை ஏற்றம் பெறச் செய்ய முடியும்.
காதிப் பொருட்களை பெருமளவில் தயாரிப்பவர்கள் கிராமப்புறத்தினர்தான். எனவே அதிக அளவில் காதிப் பொருட்களைப் பயன்படுத்துங்கள், கதர் அணியுங்கள்.
ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதால் காதிப் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என மகாத்மா காந்தியும் பிரசாரம் செய்து வந்தார். காதி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தமிழக அரசு, தனது காதி கிராம தொழில் வாரியம் மூலம் காதிப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசும் உதவி செய்கிறது. காதி பொருட்களுக்கு ஆண்டு முழுவதும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் அளிக்கப்பட்டு வருவது சிறப்பானது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications