தமிழகம்.. வருகிறது வடகிழக்குப் பருவமழை
நாட்டின் பெரும்பாலான பகுதி தென்மேற்குப் பருவ மழையை நம்பி இருந்தாலும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வடகிழக்குப் பருவ மழையையே அதிகம் நம்பியுள்ளன.
தமிழகத்தின் ஆண்டு மழையில் 48 சதவீதம் வடகிழக்குப் பருவமழை மூலமே கிடைக்கிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் 60 சதவீத மழை, வடகிழக்குப் பருவமழையை நம்பியே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெரும்பாலான மாநிலங்களில் வழக்கமான அளவில் பெய்யவில்லை. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை சரியாகப் பெய்யாவிட்டாலும் பிற பகுதிகளில சராசரி அளவுக்கு மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் 30 வரையிலான தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் 313.3 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது சராசரியைவிட 1 மில்லி மீட்டர் மட்டுமே குறைவு.
இந் நிலையில் தென்மேற்கு பருவமழை விடைபெறுவதற்கான அறிகுறிகள் தொடங்கியுள்ளதால் அடுத்த ஓரிரு வாரங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக-கேரள எல்லையில் தொடர்மழை:
இந் நிலையில் தமிழக-கேரள எல்லை வனப்பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்துவருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அருவிகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கேரள-தமிழக எல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விடிய விடிய சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை விடாது பெய்து வருகிறது.
இம்மழையின் காரணமாக கேரள மாநிலம தென்மலை நீர்த்தேக்கம், நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, கருப்பநதி, அடவிநயினார், குண்டாறுகள் உள்ளிட்ட நீர்த்தேக்க பகுதியில் அதிக பட்சம் 100 மிமீட்டரும், குறைந்தபட்சம் 30 மீமிட்டரும் வரை மழை பெய்து வருவதால் வனப்பகுதிகளில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இம்மழையின் காரணமாக பாபநாசம், பணதீர்த்தம், மணிமுத்தாறு அருவி, குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, பாலருவி, கும்பஉருட்டி அருவிகளில் வெள்லப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையின் காரணமாக சில நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. பல கிராமங்களி்ல் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழை நீரை கிராமங்களில் வறண்டு கிடங்கும் குளங்களை தூர் வாரியும், அதனை நிரப்பிட விவசாயிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.