தேக்கடி-18 தமிழர்கள் உட்பட பலி 68 ஆக உயர்வு
தேக்கடி: தேக்கடி ஏரியில் படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் 18 பேர் இறந்துள்ளனர்.
கேரளாவில் உள்ள தேக்கடி ஏரியில் 3 நாட்களுக்கு முன்பு மாலை படகு ஒன்று விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் வரை சுமார் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
நேற்று கடற்படை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் களமிறங்கின. படகில் எத்தனை பேர் சென்றனர் என்ற விவரம் சரியாக கிடைக்கவில்லை.
ஆனால், சுமார் 74 பேருக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது என்பதால் அவர்கள் 7 பேர், இரண்டு படகு ஊழியர்களையும் சேர்ந்து கூடுதலாக 9 பேர் என மொத்தம் படகில் 83 பேர் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையி்ல் இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 44 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்து இரண்டு நாட்களுக்கு
மேலாகிவிட்டதால் ஏரிக்குள் யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் மீதமுள்ள 24 பேரும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த துயர சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 18 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் கோயம்புத்தூர் ஜெயபிரகாஷ் என்பவர் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியானார்கள்.
டெல்லி 11, மேற்கு வங்கம் 5, கர்நாடாகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த தலா 3, மகாராஷ்டிரா, பஞ்சாபை சேர்ந்த தலா ஒருவரும் பலியாகி இருக்கிறார்கள். மேலும், இரண்டு உடல்களின் அடையாளம் தெரியவில்லை.
பலியானவர்களின் உடல்கள் தேக்கடி மற்றும் குமுளி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு இறந்தவர்களின் உறவினர்கள் குவியத் துவங்கிவிட்டதால் அப்பகுதியே சோகமயமாகி உள்ளது.
படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
பலியானவர்களின் உடல்கள் விமான படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. மேலும், இந்த பணிக்காக கிங் பிஷ்ஷர் விமானம் ஒன்று உதவ இருக்கிறது.
பலியான தமிழர்களின் விபரம்:
1. கோவை குறிச்சி ஜெயபிரகாஷ் (வயது 41).
2. ஜெயபிரகாஷ் மனைவி அனுசுயா (36).
3. ஜெயபிரகாஷ் மகன் ராகுல் (4).
4. ஜெயபிரகாஷ் மகள் சுவாதி (3.
5. பல்லடம் பஞ்சலிங்கம் மனைவி சுதா (32).
6. பஞ்சலிங்கம் மகள் இலக்கியா (11).
7. பஞ்சலிங்கம் மகள் பிரகதீஸ்வரி(7).
8. தேனி மாவட்டம் பெரியகுளம் ரவிச்சந்திரன் மகள் சந்தியா (11),
9. ரவிச்சந்திரன் மகள் தாரணி(8).
10. கும்பகோணம் சேகர் மகன் ஆதித்யன் (10),
11. சேகர் மகள் பிரிதி.
12. கும்பகோணத்தை சேர்ந்த சிர்ஜித்.
13. சிர்ஜித் மனைவி சுசீலா.
14. சிர்ஜித் மகன் அப்பு.
15. மதுரை தினகரன் மனைவி அன்பரசி.
16. தினகரன் மகள் சினேகா.
17. தினகரன் மகன் சண்முகவேல்.
18. சென்னை கே.கே.நகர் ராஜசேகர்.