ரேஷனில் இன்று என்ன?-எஸ்எம்எஸ் செய்து அறியலாம்
சென்னை: ரேஷன் கடையில் இன்று அரிசியா, சீனியா என்பதை மக்கள் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்கள் தேவையில்லாமல் ரேஷன் கடைகளுக்கு சென்று ஏமாந்து திரும்புவது தவிர்க்கப்படும்.
இது குறித்து தமிழக உணவு துறை செயலர் கே.சண்முகம் கூறுகையில்,
இந்த திட்டத்துக்கான பணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பே துவக்கப்பட்டுவிட்டது. இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 28 ஆயிரம் ரேஷன் கடைக்காரர்களும் தங்களிடம் இருக்கும் கையிருப்புகள் குறித்து தமிழக குடிமை பொருள் கழகத்துக்கு தினமும் வேலை முடியும் நேரத்தில் எஸ்எம்எஸ் அனுப்புவார்கள்.
இது அங்கிருக்கும் ஒரு சர்வரில் சேமித்து வைக்கப்படும். இதிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பதில் அளிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் தற்போது ரூ. 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள்.
இதன்மூலம் ரேஷன் கடையில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
எஸ்எம்எஸ் அனுப்ப நினைப்பவர்கள் PDS என டைப் செய்யவும், அதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ள மாவட்ட எண்ணை டைப் செய்ய வேண்டும் (உதாரணம் - வடசென்னைக்கு 01), பின்னர் ரேஷன் அட்டையின் முன் பக்கத்தில் கீழே அச்சிடப்பட்டிருக்கும் கடை எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
இந்த எஸ்எம்எஸ்சை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216 ஆகிய எண்களில் ஒன்றுக்கு அனுப்பலாம்.
மாவட்ட எண், ரேஷன் கடை எண் போன்றவற்றை தெரியாதவர்கள் அந்த கடைகளில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.
இது குறித்து தமிழக குடிமை பொருள் கழக துணை கமிஷ்னர் ஒருவர் கூறுகையில்,
இந்த முறையினால் மக்கள் ரேஷன் கடைக்கு சென்று வெறுங்கையுடன் திரும்புவது குறையும். வேலைக்கு செல்பவர்கள் எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெற்று அதற்கேற்றவாறு தங்கள் வேலைகளை மாற்றி கொள்ளலாம். மூத்த குடிமக்கள், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இது உதவும் என்றார்.












Click it and Unblock the Notifications