குஜராத் ரயிலில் துப்பாக்கி சூடு-வேடிக்கை பார்த்தவர் பலி
வதோதரா: வதோதராவில் சாப்பாடுக்கு பணம் கொடுப்பதில் பயணிக்கும், உணவு விடுதி ஊழியர் ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த பயணி துப்பாக்கியால் சுட்டதில் இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த இன்னொரு பயணி ஒருவர் பலியானார்.
குஜராத் மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து வதோதரா ரயில்வே இன்ஸ்பெக்டர் டிஜே சௌத்ரி கூறுகையில்,
ரயில் வதோதராவுக்கு முன்னதாக கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த போது பயணி ஒருவர் சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறுத்துள்ளார். இதையடுத்து உணவு விடுதி ஊழியருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோபமடைந்த உணவு ஊழியர், அந்த பயணியை ஒங்கி அறைந்துள்ளார். இதையடுத்து அந்த பயணி துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
கையில் துப்பாக்கியுடன் ஒருவர் நிற்பதை மற்ற பயணிகள் கூச்சலிட்டனர். இந்த நிலையில், கோபத்தின் உச்சத்தில் இருந்த அந்த பயணி டிரிக்கரை அழுத்திவிட்டார்.
இதை பார்த்த அந்த உணவு விடுதி ஊழியர் விலகி ஓடினார். இதனால் குண்டு இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த பைரன் பகதூர் சிங் (25) என்ற வாலிபர் மீது பாய்ந்தது.
ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
பலியான அந்த வாலிபர் உத்தர பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா கிராமத்தை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications