நீதிபதி தினகரன் சொத்து விவகாரம் - தமிழகத்திடமிருந்து அறிக்கை கேட்கும் கே.ஜி.பாலகிருஷ்ணன்
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் சொத்து விவகாரம் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.
வருமானத்திற்கு மீறிய வகையில் பி.டி.தினகரன் பெருமளவில் சொத்துக்கள் குவித்துள்ளதாக சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. இது ஜாதி ரீதியாக, தமிழர் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக வருவதை தடுக்க நடைபெறும் சதி என தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பி.டி.தினகரன் உள்பட ஐந்து நீதிபதிகளின் பெயர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இந்த சர்ச்சை கிளம்பியது.
இந்த சர்ச்சை காரணமாக தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் ஒப்புதல் தொடர்பான கோப்பை மத்திய சட்ட அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசிடமும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அறிக்கை கோரியுள்ளாராம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.
ஏற்கனவே தலைமை நீதிபதியை நேரில் சந்தித்த பி.டி.தினகரன் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று மறுத்து விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பின்னணியில்தான் கே.ஜி.பாலகிருஷ்ணன் விளக்கம் கேட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதை விசாரணை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. கிடைத்த தகவல்கள் குறித்த விளக்கமாகவே கருதப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது.