இராம.கோபாலன், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது
கோவை: கோவையில் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் உள்பட 500 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 84வது ஆண்டு தினத்தையொட்டி ஊர்வலம் நடத்த போலீசாரிடம் இவர்கள் அனுமதி கோரினர்.
அனுமதி கிடைக்காததால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் எதிரே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் குவிந்தனர். அங்கு உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட இவர்கள் மத்தியில் இராம.கோபாலன் பேசுகையில்,
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆண்டு விழாவையொட்டி இந்தியா முழுவதும் ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து வருகின்றனர். தமிழக அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது என்றார்.
இதையடுத்து இராம.கோபாலன் தலைமையில் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பேரணி நடத்த முயன்ற 22 பேரும், சுங்கம் அருகே ஊர்வலமாக சென்ற 71 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ராஜவீதி, வடகோவை, கிராஸ் கட் சாலை ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட முயன்ற 244 பேர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த தடையை மீறிய ஆர்ப்பாட்டத்தையொட்டி மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications