ஆந்திர வெள்ளத்தால் அரிசி ரூ. 120, பால் ரூ. 70!
ஹைதராபாத்: வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக ஆந்திராவில் அரிசி, வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ. 120க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 50க்கும், காய்கறிகள் அனைத்தும் ரூ. 60க்கும் விற்கப்படுகின்றன.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 1 லிட்டர் பால் ரூ. 70க்கு விற்கப்படுகிறது.
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழகின்றன. பல கிராமங்கள் வெளி உலகத்துடன் தொடர்புமில்லாமல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.
வயல்வெளிகள், தோட்டங்கள் ஆகியவை நீரில் மூழ்கிவிட்டன. கர்நாடக மாநிலம் பெல்லாரி தான் வெங்காயத்துக்கு பிரசித்த பெற்ற பகுதி. அங்கும் பேய்மழை விடாது பெய்வதால் வெங்காயம் உற்பத்தி பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிருந்து தான் ஆந்திராவுக்கு வெங்காயம் செல்கிறது என்பதால் அங்கு அத்தியாவசிய தேவையான வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
விஜயவாடாவை வெள்ளம் சூழ்ந்ததால் ஒரு கிலோ அரிசி ரூ. 120க்கு விற்கப்படுகிறது.
இப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பல ஆயிரம் கறவை மாடுகள் பலியாகிவிட்டன. இதனால் பால் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 1 லிட்டர் பால் ரூ. 70க்கு விற்கப்படுகிறது.