முதல்வருக்கு ஹெலிகாப்டர்..இழுத்தடிப்பு- விமான அகாடமி தலைவர் சஸ்பெண்ட்
ஹைதராபாத்: வெள்ள நிலவரத்தைப் பார்க்கக் கிளம்பிய ஆந்திர முதல்வர் ரோசய்யாவுக்கு ஹெலிகாப்டர் தராமல் இழுத்தடித்தைத் தொடர்ந்து ஆந்திர மாநில விமானப் போக்குவரத்து அகாடமி தலைவர் டாக்டர் கே.வி. பிரம்மானந்த ரெட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஹெலிகாப்டருக்காக ரோசய்யா கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தார். கடைசி வரை ஹெலிகாப்டர் வராததால் கோபமடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக விசாரிக்குமாறு தலைமைச் செயலாளர் ரமாகாந்த ரெட்டிக்கு உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணையில் பிரம்மானந்தத்தின் அலட்சியமே ஹெலிகாப்டர் வராததற்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து பிரம்மானந்த ரெட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர் பிரம்மானந்த ரெட்டி. ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்தபோது அவர் மூலமாக பல்வேறு பலன்களை அடைந்துள்ளார்.
கிருஷ்ணப்பட்டணம், கங்காவரம், வடரேவு, நிஜாம்பட்டண் துறைமுகங்கள், ஹைதராபாத் சர்வதேச விமான நிலையக் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை இவர் வசம்தான் ஒப்படைத்திருந்தார் ராஜசேகர ரெட்டி.
அதன் பின்னர்தான் அவர் விமானப் போக்குவரத்து அகாடமிக்கு தலைவராக மாற்றப்பட்டார். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த பெல் ரக ஹெலிகாப்டரின் தன்மை குறித்து கடும் விமர்சனம் எழுந்தபோது பிரம்மானந்தம் ரெட்டியின் பெயரும் அடிபட்டது.
மேலும், மோசமான வானிலை நிலவி வருவதாக முதல்வர் அலுவலகத்திற்கு சரிவர தகவல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பிரம்மானந்தம் ரெட்டி மீது எழுந்தது.
ரெட்டியின் மறைவுக்குப் பின்னர் முதல்வரான ரோசய்யாவை சற்றும் மதிக்காத வகையில் நடந்து வந்துள்ளார் பிரம்மானந்தம். இந்த நிலையில்தான் வெள்ள நிலைமையைப் பார்க்க அரசு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்குமாறு முதல்வர் ரோசய்யா கேட்டுக் கொண்டும் கூட ஹெலிகாப்டரை அனுப்பாமல் விட்டு விட்டார் பிரம்மானந்தம். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.