கோர்ட்டுடன் அரசியல் செய்யாதீர்கள் - மாயாவதிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
டெல்லி: சுப்ரீம் கோர்ட்டுடன் அரசியல் விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது சிலைகள், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் சிலைகள், கட்சியின் சின்னமான யானை சிலைகள் என மக்கள் வரிப்பணத்திலிருந்து ஆயிரக்கணக்கான கோடிப் பணத்தை எடுத்து வாரி இறைத்து நினைவிடங்கள், பூங்காக்கள் என கட்டி வந்தது மாயாவதி அரசு.
இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டுமானப் பணிகளை அப்படியே நிறுத்த உத்தரவிட்டது. ஆனால் அதை மீறி தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டதால் மாயாவதி அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது சுப்ரீம் கோர்ட். இதையடுத்து தற்போது கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது மாயாவதி அரசு.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டுடன் அரசியல் விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என உ.பி. அரசைக் கேட்டுக் கொள்கிறோம். கோர்ட்டின் தடை உத்தரவையும் மீறி கட்டுமானப் பணிகள் நடந்துள்ளன.
இதற்கான உத்தரவை யார் கொடுத்தது என்று உங்களால் (உ.பி. அரசு வக்கீலைப் பார்த்து) கூற முடியுமா? டாம், டிக், ஹாரி போன்றோர் இதைப் பிறப்பித்திருக்க முடியாது. உயர் மட்டத்திலிருந்துதான் இந்த உத்தரவு வந்திருக்க வேண்டும்.
நினைவிடங்கள் தொடர்பான பணிகளை நிறுத்துவதில் அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. இதுதொடர்பாக அது தாக்கல் செய்த விளக்க அறிக்கை ஒரு கண்துடைப்பாகவே தெரிகிறது எனறு தெரிவித்தனர்.