திருச்செந்தூர் தொகுதிக்கு இப்போது இடைத் தேர்தல் இல்லை
டெல்லி: நாடு முழுவதும் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பட்டியலில் தமிழகத்தின் திருச்செந்தூர் இடம் பெறவில்லை. இதனால் இத்தொகுதிக்கு இப்போதைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.
இந்த இடைத் தேர்தலுடன் உ.பி. மாநிலம் பெரோஸாபாத் லோக்சபா தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியிலும், கன்னூஜ் தொகுதியிலும் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றார். இதையடுத்து பெரோஸாபாத்தை அவர் ராஜினாமா செய்தார். இதனால் இங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அவரது மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார்.
நேற்று இடைத் தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம், உ.பி.,யில் 11 சட்டசபை தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 10, கேரளாவில் மூன்று, அசாம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மாநிலங்களில் தலா இரண்டு தொகுதிகளிலும் சட்டீஸ்கரில் ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
இங்கு நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழகத்தில் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ர அதிமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கட்சியை விட்டு நீக்கப்பட்டதால் தனது எம்.எல்.ஏ பதவியைத் துறந்தார். இதனால் அது காலியாக உள்ளது. எனவே இங்கு இடைத் தேர்தல் நடைபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் நேற்றைய அறிவிப்பில் திருச்செந்தூர் இடம் பெறவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை நரேஷ் குப்தாதான் தெரிவிக்க வேண்டும். அனேகமாக ஜனவரிக்குப் பின்னர்தான் திருச்செந்தூரில் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.
ஒரு தொகுதியில் காலியிடம் ஏற்பட்டால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பது விதி என்பது குறிப்பிடத்தக்கது.