கேரள அணை ஆய்வுக்கு அனுமதி - மத்திய அரசு முடிவை எதிர்த்து வழக்கு: கருணாநிதி
சென்னை: முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டும் இடத்தில் கேரள அரசு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவது பற்றி நீண்ட நாட்களாக தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. தற்போது இந்தப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்திலே நிலுவையில் உள்ளது. அங்கே இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே கேரள அரசு புதிய அணை கட்டுவது குறித்து ஒரு ஆய்வினை மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டதாகவும், அதற்கு சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தில் இருந்து ஒப்புதல் தரப்பட்டு விட்டதாகவும் ஏடுகளிலே செய்தி வந்தது.
அந்தச் செய்தி வந்ததும், 22.9.09 அன்று மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசுக்கு தமிழக அரசின் சார்பில் நான் எழுதிய கடிதத்தில், "முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சினைக்காக உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, அந்த வழக்கின் மீதான விவாதம் 20.10.09 அன்று நடைபெறுவதாக உள்ளது. இந்தநிலையில் இந்த பிரச்சினை குறித்து கருத்து கூறுவது நீதிமன்ற கண்டனத்துக்கு உரியது. எனவே கேரள அரசுக்கு எந்த விதமான அனுமதியும் வழங்குவதற்கு முன்பாக தமிழக அரசின் கருத்தையும் தாங்கள் கேட்க வேண்டும்'' என்றும் எழுதி இருந்தேன்.
ஆனால் இன்று தமிழக அரசுக்கு கிடைத்துள்ள செய்தியின்படி, மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் இதுபற்றி எந்த கருத்தையும் கேட்காமலேயே, கேரள அரசுக்கு புதிய அணை கட்டுவதற்கு முன்னோடி ஆய்வு நடத்திட இன்று அனுமதி அளித்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அனுமதிக்கு உடனடி தடை வழங்க கோரி வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.