ஈழம்: ஜெ வாய்ச்சவடால் என்ன ஆச்சு?-கி.வீரமணி
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சியில் திமுக நடத்திய அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானம், இங்கே அகதிகளாக வந்து அகதிகள் முகாம்களிலே வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நம்நாட்டில் குடியுரிமை வழங்க மத்திய அரசினை வற்புறுத்தும் தீர்மானம் ஆகும்.
இதை உண்மையாகவே தமிழர்களுக்காக பரிவு காட்டுவோர் அனைவரும் வரவேற்பர். நடிப்புக்காக, ஒப்புக்காக தேர்தல் வெற்றி நப்பாசையைக் கொண்டு, தனி ஈழம் பெற்றுத் தருவோம் என்றெல்லாம் திடீரென்று அன்று வாய்ச்சவடால் அடித்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்கு பிறகு இதுபற்றி இதுவரை வாய் திறக்கவே இல்லை.
ஆனால் இப்போது இந்த அம்மையார் மேற்கண்ட தீர்மானத்தால் ஈழத்தமிழர் அகதிகளுக்கு ஒரு பயனும் விளையாது என்று கூறி, தனது ஆற்றாமையை முதல்வர் மீதும், திமுக அரசு மீதும் உள்ள ஆத்திரத்தை காட்டி, தனது அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இங்குள்ள நம் ஈழத்து சொந்தங்களுக்கு நாம் குடியுரிமை வாங்கித் தருவதன் மூலம் அவர்கள் உள்ளபடியே முகாம்களுக்குள்ள வேற்றாராக எண்ணாது அவரவர் பணி செய்து குடியுரிமை மூலம் நமக்குள்ள அத்துணை உரிமைகளையும் அவர்கள் அனுபவிக்கும் நிலையை உருவாக்கிடலாம்.
அவர்கள் தங்களது தாய் மண்ணிற்கு செல்ல விரும்பினால் அதற்குரிய சூழல் அங்கே வந்து அவர்கள் திரும்பிட எந்த தடையும் இல்லையே!.
எனவே பழைய பாட்டுபோல், 'என்ன? என்ன? என்ன?' என்று கேட்பதன் மூலம் ஜெயலலிதா இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகளின் நலத்திற்கு கேடு செய்கிறார்.
எங்கு அரசியல்-எதிலும் அரசியல்தானா? கருணாநிதியோ, திமுகவோ செய்தால் எல்லாம் தவறுதானோ! என்று கூறியுள்ளார் வீரமணி.