காவல் நிலைய ரகளை-கைதாகும் பாமக எம்எல்ஏ
சென்னை: மணல் திருடர்களுக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் புகுந்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து அமளியை ஏற்படுத்திய பாமக எம்.எல்.ஏ கலிவரதனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பில்ராம்பட்டு பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை, ஏரியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக மணல் எடுத்தபோது, அதைத் தடுத்த சரவணன் மற்றும் மூன்று பேரை அடித்ததற்காகவும், சட்டவிரோதமாக மணல் கடத்தியதற்காகவும் ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர், அரகண்டநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஏழுமலைக்கும், பா.ம.க. வை சேர்ந்த முகையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஏ.டி.கலிவரதனுக்கும் வியாபார ரீதியாக தொடர்பு இருந்து வருகிறது.
அவர், ஏழுமலையை போலீஸ் காவலில் இருந்து விடுவிப்பதற்காக நேற்று காலை சுமார் 10 மணி அளவில் காவல் நிலையத்துக்கு வந்து காவல் நிலைய அதிகாரிகளிடம் தகராறு செய்து அவரை மீட்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.
திருக்கோயிலூர் டி.எஸ்.பி. முத்து நல்லியப்பன், காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று ஏழுமலையை விடுவிப்பதை தடுத்துள்ளார்.
ஒரு மணி நேரத்துக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் வெளியில் சென்றுள்ளார். இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், வி.ஏ.டி.கலிவரதன் மீது அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் பிரிவு 294 (பி), 353, 452, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்காக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications