இலங்கை அகதிகளுக்கு உதவிகளை நிறுத்தும் யுகே
லண்டன்: இலங்கை அரசு இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்களை மறு குடியமர்த்த நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து தாமதித்து வந்தால், அகதிகள் முகாம் பராமரிப்புக்காக வழங்கி வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்தி விடுவோம் என இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது.
ஆனால் நிறுத்தினால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்து வளர்ச்சித் துறை அமைச்சர் மைக் போஸ்டர் இலங்கை வந்து மாணிக் பார்ம் அகதிகள் முகாமைப் பார்வையிட்டு விட்டுச் சென்றார். இந்த முகாம் வளாகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை புளி மூட்டை போல அடைத்து வைத்துள்ளனர்.
மைக் போஸ்டரின் வருகைக்குப் பின்னர், இலங்கை அரசின் முகாம் பராமரிப்புக்காக நிதியுதவி வழங்குவது வீண் என்று போஸ்டர் அரசுக்கு அறிக்கைக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சுதந்திரமான நடமாட்டம் தற்போது இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இல்லை. அது வேண்டும்.
மேலும், இங்கிலாந்தின் நிதியுதவி, இடம் பெயர்ந்த மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் உதவாது என்று மைக் போஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்குத்தான் மக்களை இடம் மாற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. இதனால் அந்த மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கப் போவதில்லை.
இந்த நிலை நீடித்தால் அவசர உதவிகளைத் தவிர பிற நிதியுதவி உள்ளிட்டவற்றை நிறுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக போஸ்டர் தனது முகாம் பயணம் குறித்துக் கூறுகையில், இவை அனைத்தும் ரகசிய முகாம்களைப் போலவே உள்ளன. இங்குள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். மனிதாபிமான நெருக்கடி தவிர்க்கப்பட வேண்டும்.
அகதிகள் போர் பாதித்த பகுதிகளில் உள்ள தங்களது வீடுகளுக்குத் திரும்புவதை அரசு தடுத்து வருவது வருத்தம் தருகிறது. இந்த விஷயத்தில் அரசுத் தரப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இது ஏமாற்றம் தருகிறது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் அவர்களது இருப்பிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்.
தற்போது முகாம்களில் உள்ள கூரைகள் பாழடைந்து வருகின்றன. பல கூரைகள் கிழிந்து போய் உள்ளன. மழைக்காலம் நெருங்கி வருவதால் அங்குள்ள மக்களின் நிலை பெரும் கேள்விக்குறியில் உள்ளது. எங்கு பார்த்தாலும் கழிவு நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் பெருமளவில் பரவிக் கொண்டுள்ளன.
இப்படிப்பட்ட முகாம்களுக்கெல்லாம் நிதியுதவி தர நாங்கள் தயாராக இல்லை என்றார்.
அதனால் என்ன? - இலங்கை
ஆனால் இதுகுறித்து தாங்கள் கவலைப்படப் போவதில்லை என்று இலங்கை கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை அமைதிச் செயலகத்தின் குழுத் தலைவர் ராஜீவ விஜயசிங்க பிபிசிக்கு அளித்த பேட்டியின்போது, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கான உதவியை இங்கிலாந்து நிறுத்தினாலும், வேறு பல நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து உதவ தயாராக இருக்கின்றன.
எனவே இங்கிலாந்தின் இந்த முடிவால் நாங்கள் கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார்.