குவான்டனாமோ சிறை-ஜனவரிக்குள் மூடப்படாது?
இதனால், இங்கு அடைக்கப்பட்டுள்ள 220 வெளிநாட்டுக் கைதிகள் மேலும் சில காலம் இங்கேயே அடைபட்டுக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் ஜூனியர் கூறுகையில், ஜனவரி 22ம் தேதிக்குள் சிறைச்சாலையை மூட வேண்டும் என்ற கெடு வலியுறுத்தப்பட மாட்டாது. அதற்குள் சிறையை மூடுவதும் இயலாத நிலை உள்ளது. அது கடினமானது.
இருப்பினும் அதிபர் வைத்துள்ள இலக்குக்குள் அதை நிறைவேற்றத் தேவையான முயற்சிகளை நீதித்துறை எடுத்து வருகிறது. முடிந்தவரை சிறைச்சாலையை மூடவே நாங்கள் முயன்று வருகிறோம். இருப்பினும் கெடு காலத்திற்குள் அது நிறைவேறுமா என்பது சத்தியமாக கஷ்டம்தான்.
குவான்டனாமோவில் அடைக்கப்பட்டுள்ள பயங்கர தீவிரவாத செயல் புரிந்த தீவிரவாதிகளை அமெரிக்காவில் உள்ள சிறைகளிலேயே பாதுகாப்பான முறையில் அடைத்து வைக்க முடியும் என்றார் ஹோல்டர்.
ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் குவான்டானாமோ கைதிகளை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து அமெரிக்கச் சட்டப்படி விசாரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது நினைவிருக்கலாம். இது சட்டமாக மாறினால் ஒபாமாவின் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும்.
கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் ஆகியோரும் கூட, குவான்டானாமோ சிறையை ஜனவரிக்குள் மூடுவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிறையை மூடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஒபாமாவால் நியமிக்கப்பட்ட இரு குழுக்களும் தங்களது பணியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது.