பேருந்து நிலையம்-கோவில்பட்டியில் கடையடைப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என கோரி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
கோவில்பட்டியில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைபாஸ் ரோடு பகுதியில் இருக்கும் புதிய பேருந்து நிலையம் வழியாக சென்னை, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட தொலைதூரங்களில் இருந்து வரும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் மதுரை, திருச்சி, நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு செல்லும் மக்கள் புதிய பேருந்து நிலையத்துக்கு போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கூடுதல் அலைச்சல் ஏற்படுகிறது.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்து புறநகர் பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி கடந்த மாதம் 30ம் தேதி முதல் புறநகர் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இதனால் பழைய பேருந்து நிலையத்திற்குள் புறநகர் பேருந்துகள் வராததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டி அண்ணா பெயரை தாங்கியுள்ள பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு நடைபெற்றது.












Click it and Unblock the Notifications