இந்திய கடற்படையின் கைதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் மறியல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை இந்தியக் கடற்படையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்து மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்ததைக் கண்டித்து நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுவரை இலங்கை கடற்படையினர்தான் தமிழக மீனவர்களை தடுத்து வந்தனர். ஆனால் முதல் முறையாக நேற்று முன்தினம், இந்தியக் கடற்படை, இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி சென்று மீன் பிடித்த 22 மீனவர்களையு், அவர்களது 11 படகுகளையும் பிடித்து வந்து மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த மீனவர்களுக்கு மீன் பிடிக்கச் செல்லும் அனுமதி டோக்கன் தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் உள்ள மீன்வளத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கிளம்பி தனுஷ்கோடி சாலையில் உள்ள தேவர் சிலை அருகே சாலை மறியலில் குதித்தனர்.
அவர்களிடம் போலீஸாரும், மீன்வளத்துறையினரும் பேச்சு நடத்தினர். பின்னர் மீனவர்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.