கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
கோவை: கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர்கள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இது தொடர்பாக மாணவர்களுக்கும், கல்லூரி நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகிகள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீஸார் 6 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அன்றைய தினத்தில் விடுமுறையிலிருந்த மாணவர் சங்கமேஸ்வரன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், அந்த வழக்கை வாபஸ் பெறக் கோரியும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனுவை அளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், மாணவர்கள் சமாதானமடைந்து போராட்டத்தை கைவிட்டனர்.