தில்லுமுல்லு - மின்வாரிய பொறியாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின் கட்டண வசூலில் முறைகேடு செய்ததை கண்டுகொள்ளாமல் விட்ட உதவி மின்பொறியாளர் உள்ளிட்ட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த மாதம் மின் அளவு கணக்கெடுக்க தூத்துக்குடி நகர் தெற்குபிரிவு சிதம்பர நகர் அலுவலகத்தில் இருந்து மின் வாரிய கணக்கிட்டாளர் சென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பதவியில் இருக்கும் ஊழியர் மாற்றப்படுவார்கள் என்பதால் இம்முறை புதிய ஊழியர் சென்றார். அங்கு சென்று அவர் மீட்டரில் காட்டப்பட்ட பயனீட்டு அளவை கண்டதும் மிகவும் குறைவாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அதுகுறித்து மின் கட்டண கண்காணிப்பு பொறியாளருக்குப் புகார் கொடுத்தார். ஆய்வு செய்த பின் மின் கண்காணிப்பு பொறியாளர், அந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்துள்ளதையும், அதனால் ரூ.3 லட்சம் வரை மின்வாரத்தியத்திற்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்தார்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடந்தது.
இதற்கிடையே இந்த விவகாரம் மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக தூத்துக்குடி நகர் தெற்கு பிரிவு உதவி பொறியாளர் ரமேஷ்குமார், கணக்கீட்டு ஆய்வாளர் ராஜன்பாபு, வருவாய் மேற்பார்வையாளர் வெள்ளைசாமி மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி கணக்கீட்டாளராக பணிபுரிந்த தில்லைராஜன் ஆகிய 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications