நெல்லை இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்-கோர்ட் உத்தரவு!
கோவில்பட்டி: கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருநெல்வேலி இன்ஸ்பெக்டருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி ராம் அனுமன் நகரைச் சேர்ந்த கணபதி நாயக்கர் மகன் ஜெய்சங்கர் (33). இவருக்கும், ஜோதிக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நவீன் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில், தனது மனைவிடம் நகைகள் கேட்டு ஜெய்சங்கர் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது . இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் வெறுப்படைத்த ஜோதி ராம் அனுமன் நகரில் உள்ள தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி ஜோதியின் தாயார் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மேற்கு காவல் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் திருநெல்வேலி பாலம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெபராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி இன்ஸ்பெக்டர் ஜெபராஜுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications