இலங்கைக்கு திமுக, காங்., வி.சி. எம்.பிக்கள் பயணம்
டெல்லி: இலங்கையில் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் நிலை குறித்து ஆராய இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் குழுவில், திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை அடங்கிய திமுக கூட்டணி எம்.பிக்கள் மட்டும் இடம் பெறுகிறார்கள்.
மு.க.ஸ்டாலின் இக்குழுவில் இடம் பெற மாட்டார் என்றும், அவருக்குப் பதில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கிச் செல்வார் என்று தெரிகிறது.
அக்டோபர் 10ம் தேதி தமிழக குழு இலங்கை விஜயம் செய்யும் என்ற தகவல் மட்டும் உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்திய எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் வைத்தது நினைவிருக்கலாம். இருப்பினும் தமிழக அளவிலான குழுவையே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் குழு இலங்கை செல்லும் என முன்னர் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஸ்டாலின் இக்குழுவில் இடம் பெற மாட்டார் எனத் தெரிகிறது. அவருக்குப் பதில் டி.ஆர்.பாலு தலைமை தாங்குவார் என்று தெரிய வருகிறது.
இக்குழுவில் திமுக சார்பில் கனிமொழி, ஏ.கே.எஸ்.விஜயன், ஹெலன் டேவிட்சன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெறலாம்.
காங்கிரஸ் தரப்பில் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி.சித்தன், ஹாரூன் ரஷீத், எஸ்.அழகிரி ஆகியோர் இடம் பெறலாம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவனும் இக்குழுவில் இடம் பெறவுள்ளார்.
இந்தக் குழு சில இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிடும். அக்டோபர் 14ம் தேதி இவர்கள் நாடு திரும்புவார்கள்.
இன்று இந்த எம்.பிக்கள் குழு சென்னையில் கூடி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது. அதன் பின்னர் நாளை இவர்கள் கொழும்புக்குப் பயணமாவார்கள் என்று தெரிகிறது.
திமுக கூட்டணி கட்சி எம்.பிக்கள் குழுவின் பயணம் குறித்த முறைப்படியான தகவல் இன்று வெளியாகலாம்.