கணவன்-மனைவி தனித்தனி கேஸ் இணைப்பு பெறலாம் -உயர்நீதிமன்ற பெஞ்ச்
மதுரை: கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் இருவரும் தனி நபர் என்பதால் தனித்தனியாக கேஸ் இணைப்பு வழங்கலாம் என மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.
மதுரை வில்லாபுரம் மாரியப்பன் என்பவர் சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
நான் கடந்த 1976 முதல் கேஸ் இணைப்பு பெற்றுள்ளேன்.
இந் நிலையில் கடந்த 2007ம் ஆண்டு என் மனைவி பெயரில் ஒரு இணைப்பு இருக்கிறது என கூறி எனது பெயரில் இருந்த இணைப்பை துண்டித்து விட்டனர். எனவே துண்டித்த இணைப்பை எனக்கு மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தனது தீர்ப்பில்,
ஒரு குடும்பத்துக்கு ஒரு கேஸ் இணைப்பு தான். ஒரே வீட்டில் இருக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் பெயரில் இணைப்பு இருக்க வேண்டும். மனுதாரர் தனது மனைவி பெயரில் இருக்கும் இணைப்பில் கூடுதல் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார் மாரியப்பன். அது நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், துரைச்சாமி அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் ஆஜரான கேஸ் நிறுவன அதிகாரி தாக்கல் செய்த பதில் மனுவில்,
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவிக்கு தனித்தனி கேஸ் இணைப்பு கொடுத்தால், அவர்கள் அதை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர்களுக்கு அரசு கொடுக்கும் மானியம் தவறாக பயன்படுத்தப்படும் என கூறப்பட்டது.
வாதங்களைக் கேட்ட பின்னர் தீர்ப்பளித்த நீதிபதிகள்,
கேஸ் இணைப்பு பெறுவது தொடர்பான அரசின் வழிகாட்டுதலில் தனிநபர் அல்லது நிறுவனம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர், நிறுவனங்கள் பெயரில் கேஸ் இணைப்பு பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு அல்லது குடும்பத்துக்கு ஒன்று என எதுவும் கூறப்படவில்லை.
கணவன், மனைவி இருவரும் ஒரே குடும்பத்தில் இருந்தாலும் அவர்கள் தனித்தனி நபர் தான். எனவே அவர்களுக்கு தனித்தனி கேஸ் இணைப்பு பெற தகுதி உள்ளது. இதனால் தனிநபர் பெயரில் கேஸ் இணைப்பு வைத்து இருப்பது தவறாகாது.
கேஸ் சிலிண்டர்கள் தவறாக பயன்படுத்தப்படும் என அச்சம் எழுந்தால், அவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
அதை தவிர்த்து வேறு காரணத்தை காட்டி ஒரே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தனி தனி கேஸ் இணைப்பு தர மறுக்கக் கூடாது என்றனர்.