நீதிபதி தினகரன் பதவி உயர்வு நிறுத்திவைப்பு - உச்ச நீதிமன்றம்
டெல்லி: கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி தினகரனின் பதவி உயர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் நிறுத்தி வைத்துள்ளார்.
பெங்களூர் உயர் நீதிமன்ற நீதிபதி தினகரன் திருத்தணி தாலுகாவில் காவிரிராஜபுரம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும், மேலும், அவர் பல ஏக்கர் நிலங்களை முறைகேடாக ஆக்ரமித்திருப்பதாகவும் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு இது தொடர்பாக விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து திருவள்ளூர் கலெக்டர் ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது சுமார் 197 ஏக்கர் நிலம் ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. மேலும், நீதிபதி தினகரன் புறம்போக்கு நிலம், ஏரிகள், கால்வாய்கள் ஓடைகள், கிராம மக்களின் நடைபாதை, பழங்கால மண் கோட்டை ஒன்றையும் ஆக்ரமிப்பு செய்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மீது ஆய்வு நடத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன், பிஎன் அகர்வால், எஸ்ஹெச் கபாடியா, அல்டாமஸ் கபிர் ஆகியோர் கொண்ட குழு தினகரனின் பதவி உயர்வை நிறுத்தி வைத்துள்ளது.
அவரை தவிர்த்து மத்திய பிரதேச உயர்நீதி்மன்ற தலைமை நீதிபதி அனங்க குமார் பட்நாயக், பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி திரத் சிங் தாகூர், கொல்கத்தா தலைமை நீதிபத சூரிந்தர் சிங் நிஜ்ஜார், குஜராத் தலைமை நீதிபதி கேஎஸ் ராதாகிருஷ்ணன் ஆகிய நால்வருக்கு மட்டும் பதவி உயர்வுக்கு பரிந்துரை மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.