ஸ்வைன்: இந்தியாவில் இதுவரை 385 பேர் பலி
டெல்லி: பன்றி காய்ச்சலுக்கு நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 5 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் பலி எண்ணிக்கை 385 ஆக அதிகரித்துள்ளது.
பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருவர் பலியானார்கள். மேலும், முன்னதாக பலியான மூன்று பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இம்மாநிலத்தில் இதுவரை 158 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 3277 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 108 பேர் பலியாகியுள்ளனர். இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1203 மட்டும் தான். ஆனால், இதைவிட அதிக நோய் தாக்கம் கொண்ட தமிழகத்தில் (1373 பேருக்கு பரவியுள்ளது) 4 பேர் மட்டுமே பலியாகி இருப்பது தமிழக அரசு மற்றும் மக்களிடையே உள்ள விழிப்புணர்ச்சியை காட்டுகிறது.
அதேபோல் ஆந்திராவில் 42, குஜராத் 36, டெல்லியில் 15, கேரளா 9, ஹரியானா 4, கோவா 3, உத்தர்கண்ட், உத்தர பிரதேசத்தில் தலா 2, ராஜஸ்தான், சட்டீஸ்கரில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.