காற்றாலை மின்சாரம் குறைந்தது - தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு
சென்னை: தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நகரங்களில் சுமார் 3 மணி நேரமும், கிராமப்புறங்களில் சுமார் 6 மணி நேரமும் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் உற்பத்தி குறைவு தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக 1400 மெகாவாட் மின்சாரத்தை தயாரித்து தந்த காற்றாலைகள் தற்போது 400 மெகா வாட்டுக்கு குறைவாக உற்பத்தி செய்து வருகிறது. இதனால் தான் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை நகருக்கு மட்டும் இந்த மின்வெட்டில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையின் புறநகர் பகுதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வெட்டு இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், நிலகிரி பகுதியில் தலா 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மதுரை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
மதுரையில் நேரம் குறிப்பிட்டு மின்வெட்டை அமல்படுத்தி வருகின்றனர்.
தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கமும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருப்பது இப்பிரச்சனையை கூடுதல் சிக்கலாக்கியுள்ளது. நெய்வேலியில் இருந்து தமிழகத்துக்கு சுமார் 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கி வரும் ஆந்திர ராமகுண்டம் மின் நிலைய உற்பத்தி நிறுத்தி வைப்பு, தூத்துக்குடியில் இருக்கும் இரண்டு மின்நிலையங்கள் இயங்காதது போன்றவையும் மேலும் சில காரணங்களாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மின்வெட்டு குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். இன்னும் சில நாட்களில் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணப்படும். காற்றாலைகளுக்கான பருவகாலம் அக்டோபர் 15ல் முடியும். இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாக முடிந்துள்ளது.
மேலும் காற்றாலை மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 1400 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. அது கடந்த வாரம் 400 மெகாவாட்டாக குறைந்தது. பின்னர் அது அதிகரிக்க துவங்கிவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications