பிணையாளிகள் மீட்பு - பாக். ராணுவத் தலைமையக ஆக்கிரமிப்பு முடிந்தது
ராவல்பிண்டி: பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்திற்குள் புகுந்திருந்த கடைசித் தீவிரவாதியையும் பாகிஸ்தான் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். மேலும், அங்கு பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 39 பேரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். இதன் மூலம் ராணுவத் தலைமையகம் முழுமையாக பாதுகாப்புப் படையினரின் கைக்கு வந்துள்ளது.
ராவல் பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்திற்குள் நேற்று ராணுவ சீருடையில் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், சரமாரியாக சுட்டபடி ஊடுறுவினர். இதில் ராணுவத் தரப்பில் சிலர் உயிரிழந்தனர். ராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், சில தீவரவாதிகள் தலைமையகத்திற்குள் நுழைந்து சிலரைப் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
இதையடுத்து இன்று காலை தலைமையகத்திற்குள் கமாண்டோப் படையினர் அனுப்பப்பட்டனர். அவர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 கமாண்டோக்கள், 3 பிணைக் கைதிகள் உயிரிழந்தனர்.
ஒரு தீவிரவாதி குண்டுக் காயத்துடன் உயிருடன் பிடிபட்டான். இதன் மூலம் முற்றுகை முடிவுக்கு வந்துள்ளதாகவும், எந்தத் தீவிரவாதியும் தற்போது உள்ளே இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications