அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் பிருத்வி-2 வெற்றிகரமாக பரிசோதனை
நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய பிருத்வி-2 ஏவுகணை இன்று காலை ஒரிசா மாநிலம் சந்திப்பூர் அருகே உள்ள ஏவுகணைத் தளத்திலிருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது.
காலை 10.28 மணிக்கு ஒரு ஏவுகணையும், 10.33 மணிக்கு இன்னொரு ஏவுகணையும் தனித் தனியாக ஏவப்பட்டன.
பின்னர் இதன் முடிவுகள் விரிவாக ஆராயப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனையையொட்டி வங்கக் கடலில் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஏற்கனவே பிருத்வி-2 ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டது. ராணுவத்தின் சிறப்புப் பிரிவு பிருத்வி-2 ஏவுகணையைக் கையாளும் பொறுப்பில் உள்ளது.
இரட்டை என்ஜின்களைக் கொண்ட பிருத்வி-2 ஏவுகணை 9 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்டது.
திரவ மற்றும் திட எரிபொருளால் இயங்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான குண்டுகள் தவிர அணு குண்டுகளையும் ஏந்திச் செல்லக் கூடிய திறமை படைத்தது பிருத்வி-2.
இன்று நடந்த சோதனையை, பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் வி.கே.சரஸ்வத், மூத்த விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள் நேரில் பார்த்தனர்.