விபச்சாரம்-சென்னையில் வாடைக்கு வீடு கொடுப்பதில் புது சிக்கல்
சென்னை: சென்னையில் விபச்சாரக் கும்பலின் தொல்லை பெருகி விட்டது. பெரும் பணம் கொடுத்து வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் செய்து பின்னர் போலீஸாரிடம் அந்தக் கும்பல்கள் பிடிபட்டு விடுவதால், வாடகைக்கு வீடு கொடுக்க சென்னை மக்கள் பெரும் அச்சப்படுகின்றனர். மேலும் வீட்டை வாடகைக்கு விடுவோரும் பெரும் சிக்கலுக்குள்ளாகின்றனர்.
இதனால் நல்ல குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கூட வீடு கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெயந்தி என்ற ஐ.டி நிறுவன பெண் கூறுகையில்,
சமீபத்தில் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் எங்களுக்கு போன் செய்து, சாஸ்திரி நகரில் வாடகைக்கு விடப்பட்டிருக்கும் உங்கள் வீட்டில் சோதனை நடத்தி இரண்டு பெண்களை மீட்டுள்ளோம். ஆனால், அவர்களுடன் இருந்த மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர் என்றனர்.
இதை கேட்டதும் ஆசையாய் கட்டிய வீட்டில் விபச்சாரம் நடக்கிறதா என அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் எனது வீட்டுக்கு சென்ற போது அருகிலிருந்தவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். எனக்கு மிகவும் அவமானமாகிவிட்டது.
அப்போது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் என்னிடம் போலீஸார் எனது வீட்டை பூட்டு சாவி எடுத்து சென்று விட்டதாகவும், அது கிடைக்க குறைந்தது 1 மாசமாகும் என்றும் கூறினார். மேலும், என் வீட்டில் குடியிருந்தவர்களின் வக்கீல் எனக்கு போன் செய்து தவறான வார்த்தைகளால் பேசினார்.
அவர்கள் என்னிடம் வீடு கேட்கும் போது தான் ஒரு வங்கியில் வேலை பார்ப்பதாகவும், தனது மனைவி ஒரு நாட்டிய பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார். நானும் அவர்களை நம்பி விட்டேன் என்றார்.
இதேபோல ராஜசேகர் என்பவர் கூறுகையில்,
எனது வீட்டில் ஒரு தம்பதிகள் தங்கியிருந்தனர். அவர்களுடன் அவர்களது உறவுக்கார பெண்ணும் தங்கியிருந்தார். ஒரு நாள் அவர்கள் மூவரும் எனது நண்பர் ஒருவரின் ஐஸ் கிரீம் பார்லருக்கு வந்திருந்தனர்.
அப்போது எனது நண்பன் அவர்கள் ஒரு விபச்சார கும்பல் என்றும், தினமும் அந்த பெண்ணை வாடிக்கையாளர்களுடன் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர்களுக்கு தெரியாமல் அப்பகுதியில் இருந்தே அவருக்கு போன் செய்தேன். அப்போது அவர் தான் மருத்துவமனையில் இருப்பதாக என்னிடம் பொய் சொன்னார்.
இதையடுத்து அவர்களை எனது வீட்டிலிருந்து துரத்தி விட்டேன் என்றார்.
போலீஸிடம் கேளுங்கள்...
இது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில்,
வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் தங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் அல்லது பழக்கமானவர்களுக்கு மட்டுமே வாடகைக்கு வீடு தர வேண்டும். வீட்டு வாடகை ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்திட வேண்டும்.
மேலும், அவர்கள் தங்களது வீட்டில் குடியிருப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். தேவைப்பட்டால் அவர்களது நடவடிக்கைகளையும், பின்புலத்தையும் உள்ளூர் போலீஸாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
சந்தேகப்படும் படியான வாடகைகாரர்களை பற்றி தகவலறிய அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
இப்படிப்பட்ட விபச்சாரக் கும்பலால், வீடு வாடகைக்குக் கேட்டு வரும் நல்லவர்களையும் கூட பொதுமக்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.