4 மாதத்துக்கு பின் கட்சி அலுவலகம் வந்த ஜெ!
மக்களவைத் தேர்தல் படுதோல்விக்குப் பின் கொட நாடு எஸ்டேட்டுக்குப் போய்விட்ட ஜெயலலிதா, கடந்த 9ம் தேதி தான் சென்னை திரும்பினார்.
அதிமுக ஆண்டு விழாவை முன்னிட்டு கட்சி அலுவலகம் வந்த அவர் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்கள் 46 பேருக்கும், பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிரிழந்த 12 அதிமுக தொண்டர்களின் குடும்பத் தினருக்கும் மொத்தம் ரூ. 17.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிலிருந்து அதிமுக தலைமை கழகம் வரை சாலையின் இரு மருங்கிலும் கொடி, தோரணங்கள் மற்றும் வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கட்சி அலுவலகத்தில் ஏராளமான அதிமுக மகளிர் அணியினர் பூரண கும்ப மரியாதையுடன் ஜெயலலிதா வரவேற்றனர்.
ஜெ. பரிசுவழக்கு-சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் நியமனம்:
இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு எதிரான பரிசுப் பொருள் வழக்கில் ஆஜராக என்.ஆர்.இளங்கோவனை சிறப்பு வழக்கறிஞராக சிபிஐ நியமித்துள்ளது.
1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளின்போது ரூ. 2.89 கோடி மதிப்புள்ள டி.டிக்கள் பல நாடுகளில் இருந்தும் 57 நபர்களிடமிருந்து வந்தன. முதல்வர் என்ற முறையில் இந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் சேர்த்திருக்க வேண்டிய ஜெயலலிதா அதை தனது கணக்கில் போட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந் நிலையில் இளங்கோவனை சிறப்பு வழக்கறிஞராக சிபிஐ நியமித்துள்ளது.
தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக உள்ளார்.
இந்த நியமனத்தை தொடர்ந்து சிபிஐ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஜெயலலிதாவுக்கு எதிரான பரிசுப் பொருள் வழக்கு விசாரணையில் ஆஜராகி வாதிடுவார்.
இதுதொடர்பாக என்.ஆர். இளங்கோவனுக்கு சிபிஐ அனுப்பியுள்ள தகவலில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.