கூடுகின்றன அதிமுக செயற்குழு-பொதுக்குழு!
இது தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி (நடைபெறுகிறது.
அன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்தக் கூட்டம் நடக்கும்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
நான்கு மாதத்துக்குப் பின் ஊர் திரும்பிய ஜெயலலிதா கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவை கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இவரது கூட்டணியில் இருந்த இடதுசாரிகளும் பாமகவும் பிய்த்துக் கொண்டு போய்விட்ட நிலையில் இந்தக் கூட்டங்கள் நடக்கின்றன.
முன்னதாக 5 மாதங்களுக்குப் பின் முதன்முறையாக தனது கட்சி அலுவலகத்துக்கு வந்த ஜெயலலிதா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி முழு விவரம்:
கேள்வி: கம்யூனிஸ்டு கட்சிகள் உங்கள் கூட்டணியில் இருக்கிறதா?
ஜெயலலிதா: அவர்களையே கேளுங்கள்.
கேள்வி: மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய கூட்டணியை நீங்கள் உருவாக்கி இருந்தீர்கள். உங்கள் அணியைப் பற்றி அதிக மதிப்பீடு செய்ததுதான் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதா?
ஜெயலலிதா: எம்.பி. தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடந்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். ஏற்கனவே இதுபற்றி நான் மிகுந்த விளக்கங்களை அளித்து இருக்கிறேன். எனவே மீண்டும் அந்தப் பிரச்சனைக்குள் போக விரும்பவில்லை.
கேள்வி: இலங்கைக்கு எம்.பிக்களை தனது கட்சி சார்பாகத்தான் அனுப்பி இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறாரே...
ஜெயலலிதா: இலங்கைக்கு எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டது குறித்து எனது கருத்துகளை விரிவாக கூறி இருக்கிறேன். இது வெறும் கண் துடைப்பு நாடகம். அவ்வளவுதான்.
கேள்வி: முன்கூட்டியே திட்டமிட்ட முகாம்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை எம்.பிக்கள் குழு மறுத்து உள்ளதே?
ஜெயலலிதா: இலங்கைத் தமிழர்கள் மிகவும் கேவலமாக அடைத்து வைக்கப்பட்ட நிலையில் உள்ள முகாம்களுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்களா? அல்லது தமிழர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காக, தமிழர்கள் அல்லாதவர்களை வைத்துள்ள டம்மி'யான போலி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேள்வி: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது..
ஜெயலலிதா: ஒபாமாவுக்கு நோபல் பரிசு, உரிய காலத்துக்கு முன்பாகவே கொடுக்கப்பட்டு இருப்பதாகவே கருதுகிறேன். மிகவும் முன்பதாகவே அதை ஒபாமாவுக்கு கொடுத்து இருக்கிறார்கள். ஒபாமா இதுவரை எதையும் சாதிக்கவில்லை. அவரது கொள்கைகளின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை உலகம் இன்னும் பார்க்கவில்லை. இது அவசரத்தில் காலத்துக்கு முன்பாகவே கொடுக்கப்பட்ட விருது என்றே கருதுகிறேன்.
கேள்வி: நடிகர்-நடிகைகள் பற்றிய செய்தி வெளியிட்ட விவகாரத்தில் பத்திரிகை செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளாரே?
ஜெயலலிதா: இதுபற்றி நான் பதிலளிக்க விரும்பவில்லை.
கேள்வி: இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடாதது சரியான முடிவல்ல என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
ஜெயலலிதா: எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்காகத்தான் நாங்கள் அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.