தினமலர் விவகாரம்: பிரஸ் கவுன்சில் விசாரணைக்கு எடுத்தது!
சென்னை: தினமலர் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா.
விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் என்ற தலைப்பில் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த நடிகர் நடிகைகள் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் பி. லெனினை, அலுவலகத்துக்குள் புகுந்து கைது செய்து இழுத்துச் சென்றனர் போலீசார். பணியிலிருந்த ஒரு செய்தி ஆசிரியர், இப்படி எல்லை மீறி கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுவே முதல்முறையாகும்.
இந்த கைது விவகாரத்தை பிரஸ் கவுன்சில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் செயலாளர் விபா பார்கவா விடுத்துள்ள அறிக்கை:
தினமலர் செய்தி ஆசிரியர் கைதுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. லெனினை உடனே விடுதலை செய்ய எடிட்டர் கில்டு கோரியுள்ளது' என்பது போன்ற தலைப்புகளில் கடந்த 9ம் தேதியிட்ட, முன்னணி நாளிதழ்கள் நவபாரத் டைம்ஸ், இந்துஸ்தான் டைம்ஸ்' உள்ளிட்டவற்றின் டெல்லி பதிப்புகளில் வெளிவந்த செய்திகள், இந்திய பிரஸ் கவுன்சில் கவனத்துக்கு வந்தது.
'தினமலர்' செய்தி ஆசிரியர், போலீசாரால் 7ம் தேதி கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில், பத்திரிகையின் சுதந்திர செயல்பாட்டின் மீது தாக்குதல் இருப்பதற்கு ஆரம்ப முகாந்திரங்கள் உள்ளன. பத்திரிகைகளின் சுதந்திரத்தை காக்க வேண்டியது பிரஸ் கவுன்சிலின் கடமை என்பதால், பிரஸ் கவுன்சில் விசாரணை வரையறை 1979, பிரிவு 13ன் கீழ், பிரஸ் கவுன்சில் தலைவர் இப்பிரச்னையை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இப்பிரச்னையில் உள்ள முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, வழக்கு பற்றிய விவரங்கள் கொண்ட அறிக்கையை இரண்டு வாரத்துக்குள், 'தினமலர்' அளிக்க வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் இப்பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரஸ் கவுன்சில் முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார்.