மதுரை அருகே பிரபல ரவுடி படுகொலை
மதுரை: மதுரை அருகே சமயநல்லூரில் பிரபல ரவுடி வேல்முருகன் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (29). கரிமேட்டை சேர்ந்தவர் பீமன். இவர்கள் இருவரும் ரவுடிகள். இவர்கள் மீது கரிமேடு, அவனியாபுரம் ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடி பீமனின் மனைவி ராமலட்சுமி. இவருக்கும், வேல்முருகனுக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வழக்கில் பீமன் கைதான சம்பவத்திற்கு பிறகு ராமலட்சுமியுடன், வேல்முருகன் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதை அறிந்த பீமன் சிறையிலிருந்து வெளியே வந்ததும், வேல்முருகனை கொலை செய்ய திட்டமிட்டார்.
இது வேல்முருகனுக்குத் தெரிய வரவே, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சமயநல்லூர் வடகரை மகாகணபதி நகரில் வாடகைக்கு குடியேறினார். தினமும் அதிகாலை மதுரைக்கு வந்து டாக்சி ஓட்டிவிட்டு, இரவு சமயநல்லூர் போய் விடுவார்.
இவர் குடிபுகுந்தது மற்றும் இவரது நடவடிக்கைகள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கூட தெரியாத அளவிற்கு ரகசியமாக இருந்தன. நான்கு தினங்களுக்கு முன் பீமன் ஜாமீனில் வந்தார். நேற்று அதிகாலை 2 மணிக்கு வேல்முருகன் வீட்டின் பின்பக்க கதவை பீமன் தட்டினார்.
போதையில் இருந்த வேல்முருகன் கதவை திறந்த போது, அவரை பட்டாக்கத்தி மற்றும் கத்தியால் குத்தி படுகொலை செய்தார் பீமன். இதில் அவரது உடலில் 12 இடங்களில் வெட்டுக் காயம் பட்டது. இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.