மன்மோகனின் அருணாச்சல் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு
பீஜிங்: பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீன தன்னுடைய பகுதி என உரிமை கொண்டாடி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேசத்துக்கு ஆசிய வங்கி கடன் கொடுப்பதற்கும், சமீபத்தில் அப்பகுதிக்கு தலாய் லாமா சுற்றுப்பயணம் மேற்கொண்டது போன்றவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், அருணாச்சல பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருக்கும் இந்திய ராணுவத்தை விலக்கி கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று நடக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங், அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது இதற்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சக இணையதளத்தில் அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மா சாவ்சூ வெளியிட்டுள்ள செய்தியில்,
இந்தியா, சீன அரசுகளுக்கு இடையை சுமூக உறவு வளர்ந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு இந்திய தலைவர்கள் வருவது அமைதியை கெடுத்துவிடும். சீனாவுக்கு கவலை தரும் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் விசாரித்து வருகிறோம் என்றார்.
இந்தியா கோபம்:
இந் நிலையில் சீனாவின் இந்த எதிர்ப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீனத் தூதரை இன்று அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தைத் தெரிவித்தது.