போனஸ்-உண்ணாவிரதம் இருந்த 8 தொழிலாளர்கள் மயக்கம்!
ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் தொழிற்சாலை ஒன்றில் போனஸ் கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் எட்டு பேர் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் பாரிவேர் ரோகாஸ் என்ற நிறுவனம் உள்ளது. இதில் சுமார் 300 தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். இவர்களில் 120 பேர்கள் நிரந்தரப் பணியாளர்கள்.
இவர்கள் போனஸ் கேட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் உள்ளிருப்பு உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் உண்ணாவிரதம் இருந்தவர்களில் 8 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர்.
அவர்கள் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அங்கு கட்டில் படுக்கை வசதியில்லாத காரணத்தால் முதலுதவி அளிக்கப்பட்டு, அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.