கோர்ட்டுக்கு வருவதைத் தவிர்த்த நீதிபதி தினகரன்
பெங்களூர்: நில ஆக்கிரமிப்பு விவகாரம் வலுத்துள்ள நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் வழக்கு விசாரணைக்கு வருவதைத் தவி்ர்த்தார். இதனால் அவரது தலைமையிலான முதல் பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீதிபதி பி.டி.தினகரன் பெருமளவிலான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார்கள் கிளம்பின. இதையடுத்து இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிக்குமாருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பினர். அதில், ஆக்கிரமிப்பு நடந்துள்ளது உண்மைதான் என்றும், வேலிகளை அகற்றவும் முயற்சிகள் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும், விசாரணைக்காக சென்ற தாசில்தாருக்கு தொலைபேசியில் யாரிடமிருந்தோ மிரட்டல் வந்ததாகவும் புது சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து தலைமை நீதிபதி பி.டி.தினகரன், உச்சநீதிமன்ற காலேஜியத்துக்கு பதில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், திருவள்ளூர் ஆட்சித் தலைவர் அவசர கதியில், அறிக்கை அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று உச்சநீதிமன்ற காலேஜியம் விசாரிக்கவுள்ளது. இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி பி.டி.தினகரன் வரவில்லை. இதனால் அவரது தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டன.
பி.டி.தினகரன் வராததற்கு காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இன்று பி.டி.தினகரன் விசாரணைக்கு வருவார் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீதான புகார்கள் தெளிவாகும் வரை அவர் வழக்கு விசாரணையில் பங்கேற்கக் கூடாது என்று பெங்களூர் வக்கீல்கள் சங்கம் அவரை வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் ஒரு பிரிவு வக்கீல்கள் அவர் வழக்குகளை விசாரிக்கலாம் என ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications