இந்தியாவுக்கும் அடிக்கடி வெங்கி ராமகிருஷ்ணன் வர வேண்டும்- சிபல்
டெல்லி: வேதியியலில் நோபல் பரிசு பெற்றுள்ள வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் எனப்படும் வெங்கி அடிக்கடி இந்தியாவுக்கும் வர வேண்டும். இதன் மூலம் இந்திய இளைஞர்கள் மனதில் அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற வெங்கியைப் பாராட்டி அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
தாங்கள், சமீபத்தி்ல சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்து உரை ஆற்றிச் சென்றதாக அறிந்தேன். நீங்கள் இந்தியாவுக்கு அடிக்கடி வர வேண்டும். இங்குள்ள இளைய சமுதாயத்தினர் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்பட அது உந்து சக்தியாக அமையும்.
இந்தியாவில் உள்ள இளைய சமுதாயத்தினர் பெரும்பாலானோருக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்த முழுமையான விழிப்புணர்வு துரதிர்ஷ்டவசமாக இல்லை. குறிப்பாக அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது.
இந்தக் குறையை நீக்க இந்திய அரசு ஆர்வமாக உள்ளது, துடிப்புடன் உள்ளது. அதற்கு உங்களின் பயணங்கள் பேருதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.