ஜெவை தடுத்தது யார், மனசாட்சியா?-தங்கபாலு
சென்னை: தமிழர்களின் நிலையறிய எங்கள் நாட்டுக்கு வரலாம், உண்மை நிலைகளை காணலாம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதா ஏன் இலங்கைக்குப் போகவி்ல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைக்குச் சென்ற தமிழக நாடாளுமன்ற குழு பற்றி தவறாகவும், தாறுமாறாகவும அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்த அறிக்கைகளை கடந்த 2 நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார். அவரது அறிக்கைகள் அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்ததுதானா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் தோன்றியுள்ளது.
முதலில் அனைத்து கட்சியினை அழைக்கவில்லை என்றார். அடுத்து இந்த நாடாளுமன்ற குழு முதல்வர் கருணாநிதியின் கைப்பாவை என்றார். அதைத்தொடர்ந்து இக்குழு ராஜபக்சேவின் அடிவருடி என்றார். அதற்கு அடுத்த நாள் இந்த குழு அதிகாரப்பூர்வமற்றது என்றார். பிறகு இது இலங்கையில் அந்நாட்டு அரசு குறிப்பிட்ட இடங்களை மட்டுமே பார்க்க முடியும் என்றார். இக்குழு திரும்பி வந்ததும் ராஜபக்சேவுக்கு ஆதரவான அறிக்கையைத்தான் தரும் என்றும் கூறியிருக்கிறார்.
எங்கள் கூட்டணி சார்பாக 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை செல்வதற்கு 6 மாதத்திற்கு முன்பே இலங்கை அதிபர் ராஜபக்சே இலங்கை தமிழர்களின் நிலையறிய தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இலங்கைக்கு வரலாம், உண்மை நிலைகளை காணலாம் என்றும் அழைப்பு விடுத்தாரே அந்த அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நீங்கள் உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களோடு இலங்கைக்கு சென்று தமிழர்களின் நிலையை நேரில் பார்க்காதது ஏன்?.
அதற்கான முயற்சியை எடுக்காதது ஏன் என்பதை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். அதை தடுத்தது யார்?, மனசாட்சியா? தமிழ் உணர்வா? எது?.
இன்றைக்கு மத்திய- மாநில அரசுகளையும், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகிய தலைவர்கள வசைபாடும் எதிர்க்கட்சித் தலைவரும் மற்ற நண்பர்களும் இதற்கு மனம் திறந்து பதில் சொல்வார்களா?.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான். கொட்டித்தீர்த்த அறிக்கைகளை திரும்பப்பெற இயலாது. உண்மைகளை மக்களிடம் இருந்து யாரும் மறைக்க முடியாது.
இலங்கை தமிழர் நலனுக்கு உரிய பணிகளை காங்கிரஸ், திமுக போன்று வேறு எந்த கட்சியும் யாரும் செய்திட முடியாது என்பதை தமிழர்கள் அனைவரும் அறிவர் என்று கூறியுள்ளார் தங்கபாலு.