மான்செஸ்டர் ஏர்போர்ட்டில் பயணிகளை பரிசோதிக்க நிர்வாண ஸ்கேனர்

இந்த எக்ஸ்ரே ஸ்கேனர் முன் ஒருவர் நின்றால் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் அது காட்டிக் கொடுத்து விடுமாம்.
ரேபிஸ்கேன் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த எக்ஸ்ரே சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் முன் நிற்கும் யாரையும் அது நிர்வாணமாக ஸ்கேனர் கருவியில் காட்டும். அத்தோடு நில்லாமல், மார்பகப் பெருக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதைக் கூட அது காட்டிக் கொடுத்து விடுமாம்.
மேலும், செயற்கையான கால்கள், கைகள், உடலில் போடப்பட்டுள்ள துளைகள், பயணிகளின் அந்தரங்க உறுப்புகள் என அத்தனையையும் அக்கு வேறு ஆணி வேறாக காட்டிக் கொடுக்குமாம்.
கருப்பு வெள்ளையில் தெரியும் இந்த நிர்வாண ஸ்கன் படத்தை ஒரே ஒரு அதிகாரி மட்டுமே பார்ப்பாராம்.
இதுகுறித்து மான்செஸ்டர் விமான நிலைய வாடிக்கையாளர் பிரிவு தலைவர் சாரா பாரட் கூறுகையில், இந்தப் படம் பாதுகாத்து வைக்கப்படாது. படம் எடுக்கப்பட்டவுடன் அதை ஆய்வு செய்து பின்னர் அழித்து விடுவோம்.
பெரும்பாலான பயணிகள், உடல் முழுவதையும் தடவி சோதனையிடுவதை விரும்பவில்லை. அது தங்களது அந்தரங்கத்தில் தலையிடும் செயலாக உணர்கிறார்கள். எனவே இந்த ஸ்கேனர் யாரையும் தொடாமல் அவர்களுடைய உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அறிய உதவும். யாரையும் இனிமேல் உடைகளை கழற்றச் சொல்லி சோதனை போடத் தேவையில்லை.
இந்த ஸ்கேனர் மூலம் கிடைக்கும் படங்கள் ஆபாசமானவையாக இருக்காது. மேலும் இவற்றை நாங்கள் எங்குமே ஸ்டோர் செய்து வைக்கப் போவதும் இல்லை. எனவே பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது.
இருப்பினும் இந்த சோதனை வேண்டாம், உடலைத் தழுவி சோதனையிடுங்கள் என்று பயணிகள் கூறினால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
தற்போது சோதனை ரீதியாக இந்த நிர்வாண ஸ்கேனரை வைத்துள்ளனராம். விரைவில் இது நிரந்தரமாக வைக்கப்படுமாம்.












Click it and Unblock the Notifications