சம்பளத்தில் மூன்றில் இரண்டு மடங்கு குறைத்துக் கொண்ட முகேஷ்!
மும்பை: சம்பளத்தைக் குறைப்பதில் எல்லோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ முடிவெடுத்துள்ள ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, தனது சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு குறைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2007-08-ம் ஆண்டு முகேஷின் ஆண்டு சம்பளம் ரூ.44 கோடியாக இருந்தது. ஆனால் 2008-09-ம் ஆண்டு இதனை ரூ.15 கோடியாகக் குறைத்துக் கொண்டுள்ளார் முகேஷ்.
இன்றைய தேதிக்கு இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் தலைவர்கள் பலர் முகேஷை விட பல மடங்கு அதிக சம்பளம் வாங்குகின்றனராம். ஆனால் நாட்டிலேயே பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸின் தலைவராக இருந்து கொண்டு, மிகக் குறைந்த சம்பளத்தை முகேஷ் பெறுவதற்குக் காரணம், மற்றவர்களும் இந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே.
நிறுவனங்கள் சட்டப்படி, ஒரு நிறுவனத்தின் சிஇஓ, நிகர லாபத்தில் 5 சதவிகிதம் வரை சம்பளமாகப் பெற முடியும். அப்படிப் பார்த்தால் இத்தனை காலம் முகேஷ் அம்பானி பெற்று வந்த சம்பளம் ரிலையன்ஸ் நிறுவன நிகர லாபமான 5 சதவிகிதத்தைவிட மிகமிகக் குறைவாம். அதாவது 5 சதவிகித தொகையில் 98 சதவிகிதம் குறைவாகப் பெற்றுவந்தாராம்.
இப்போது அந்த தொகையிலும் மூன்றில் ஒரு பங்குதான் சம்பளம் பெறுவேன் என்று கூறிவிட்டாராம்.
அதுமட்டுமல்ல, ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களுக்கும் புதிய சம்பள விகிதத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளாராம் முகேஷ்.