மேட்டூர்: வீட்டில் விபச்சாரம் நடத்திய ஏட்டு-மனைவி!
சேலம்& சென்னை: மேட்டூரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய போலீஸ் ஏட்டு மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.
இந்த ஏட்டு தனது வீட்டிலேயே பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளார். இதையடுத்து மேட்டூர் காவிரி நகரில் உள்ள அவரது வீட்டில் ரெய்ட் நடத்திய போலீசார் 20 வயது பெண் மற்றும் புரோக்கரை கைது செய்தனர்.
போலீசார் வருவது தெரிந்து ஏட்டையாவும் அவரது மனைவியும் தப்பியோடிவிட்டனர். இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி மாமூல்-போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கைது:
இந் நிலையில் சென்னையில் தீபாவளி மாமூல் வசூலித்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூர் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியதாஸ் (54).
இவர் பாரிமுனை பந்தர் தெருவை சேர்ந்த திருமலை (30) என்பவர் எழும்பூர் பகுதியில் நடத்தி வரும் நடமாடும் ஜூஸ் கடைகளை குறி வைத்து கடைக்கு தலா ரூ.500 வீதம் மாதம் ரூ.2,500 லஞ்சமாக பெற்று வந்தார்.
தீபாவளியையொட்டி தனியாக ரூ.3,000 தர வேண்டும் என்று திருமலையிடம் கேட்டுள்ளார். திருமலை என்னால் அவ்வளவு தொகை தர இயலாது என்று கூறவே, இப்போது ரூ.3,000தந்துவிட்டு மாதந்தோறும் வழங்கும் ரூ.2,500ல் மாதம் ரூ.500 வீதம் கழித்துக் கொள்ளுமாறு கூறினார் இன்ஸ்பெக்டர்.
இதற்கும் திருமலை மறுக்கவே அவர் மீது வழக்கு போட்டு மிரட்டினார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசில் திருமலை புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் எத்திராஜ் சாலைக்கு இன்ஸ்பெக்டரை வரவழைத்த திருமலை அவரிடம் ரூ. ரூ.3,000 தந்தார். அதை வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த லஞ்சத்தை வாங்க சிவப்பு, நீல நிற விளக்குகள் சுழலும் ஹூண்டாய் ரோந்து காரில் வந்தார் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாசின் குடும்பமே போலீஸ் குடும்பம் தான். அவரது குடும்பத்தில் 6 பேர் போலீஸ் துறையில் பணியாற்றுகிறார்கள்.
திருப்பரங்குன்றம் பில் கலெக்டர் கைது:
இதற்கிடையே லஞ்சம் வாங்கிய மதுரை திருப்பரங்குன்றம் நகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார்.
ராஜூ (26) என்பவர் தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக நகராட்சி அலுவலகத்தை அணுகியபோது அங்கு பில் கலெக்டராக வேலை பார்க்கும் ராஜா என்பவர் ரூ.600 லஞ்சம் கேட்டார்.
இது குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சென்று ராஜூ புகார் தரவே ராஜாவை போலீசார் கைது செய்தனர்.