கடத்தப்பட்டதாக கூறப்பட்ட டிரைவர் நகை திருடி கைது
சிதம்பரம்: கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கார் டிரைவர், ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே உள்ள பூவாழை கிராமத்தை சேர்ந்தவர் சுதந்திரஹாசன் (26). இவர் சொந்தமாக டாடா சுமோ கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் கடந்த 3 தினங்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சுதந்தரஹாசன், சக டிரைவரான ஒருவருக்கு போன் செய்துதன்னை விருத்தாசலத்தைச் சேர்ந்த 4 பேர் சுற்றுலா செல்ல அழைத்தனர். நானும் காருடன் சென்ற போது என்னை கடத்தி ஓரிடத்தில் வைத்துள்ளனர் என்று கூறி தொலைபேசியை துண்டித்தாராம்.
இந்த தகவலை சுதந்தரஹாசனின் தம்பி சுதந்தரவாசனிடம் சக டிரைவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது அண்ணனை கண்டு பிடித்து தரும்படி புவனகிரி போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் நேற்று முன்தினம் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஒரு வீட்டில் நுழைந்து அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டு 80 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் செக்போஸ்ட் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு டாடா சுமோ காரை தடுத்து நிறுத்திய போது நிற்காமல் சென்றதால் போலீசார் காரை விரட்டி சென்றனர். கார் ஓரிடத்தில் நின்றவுடன் அதிலிருந்து 3 பேர் நகைகளுடன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
காரில் இருந்த டிரைவர் மற்றும் ஒருவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தக் காரை ஓட்டிய நபர் சுதந்திர ஹாசன் என்று தெரிய வந்தது.