9 நிறுவனங்களுக்கு சமூக பொறுப்புணர்வு விருது - ஸ்டாலின் வழங்கினார்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் சமூக பொறுப்புடன் பாராட்டத்தக்க வகையில் செயல்படும் வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்கு விக்கும் வகையில் சமூக பொறுப்புணர்வு விருது வழங்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2007-08-ம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவித்தார்.
இத்தகைய விருது நாட்டிலேயே தமிழக அரசால்தான் முதல் முறையாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரகப்பகுதிகள் மற்றும் நகரங்களிலுள்ள குடிசைப்பகுதிகள், விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச்சுகாதாரம், குடிநீர், மழை நீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக் குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் போன்ற சமூக நல மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.
அனைத்து பொதுத்துறை, அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அதன் கூட்டமைப்புகளும் இவ்விருது பெற தகுதி உடையவை ஆகும்.
இந்த நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் பாராட்டத்தக்க சமூக நல மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டிருந்தால், அத்தகைய பணிகள் விருது பெற தகுதியானவையாக எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2007-08-ம் ஆண்டில் தமிழ்நாடு காகிதம் மற்றும் செய்திதாள் நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை, செயின்ட் கோபெயன் கிளாஸ் இந்தியா லிமிடெட், சக்தி மசாலா தனியார் நிறுவனம் என 5 நிறுவனங்களும்,
2008-09-ம் ஆண்டிற்காக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், ஸ்டீல் அத்தாரிட்டி, ஆஃப் இந்தியா லிமிடெட், ஆர்கிட் கெமிக்கல்ஸ் மற்றும் பர்மா சூட் டிக்கல்ஸ் லிமிடெட், ஸ்ரீராமலிங்கா மில்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்களும் விருது பெற தேர்வு செய்யப்பட்டன.
இரண்டு வருடங்களுக்காகவும் தேர்வு செய்யப்பட்ட இந்த ஒன்பது நிறுவனங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், நற்சான்றிதழையும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
விருது பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் துணை முதல்வர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மைச் செயலாளர் அஷோக்வர்தன் ஷெட்டி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications