பாஜக முஸ்லீம் எம்பிக்கு யுஸ் விசா மறுப்பு
டெல்லி: ஐ.நா. சபையில் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்ல பாஜக எம்பி ஷாநவாஸ் ஹூசேனுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 64வது பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள கிரிஜா வியாஸ், சஞ்சய் நிருபம் (காங்கிரஸ்), டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக), அலி அன்வர் அன்சாரி (ஐக்கிய ஜனதா தளம்), சையத் ஷாநவாஸ் ஹூசேன் உசேன் (பாஜக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த 5 எம்.பிக்களும் நியூயார்க் செல்ல விசா கோரி இந்திய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்க தூதரகத்திடம் விண்ணப்பித்தது. இவர்களில் பாஜக எம்பி சையத் ஷாநவாஸ் ஹூசேன் தவிர மற்ற 4 எம்.பிக்களுக்கு மட்டும் அமெரிக்க தூதரகம் விசா வழங்கியுள்ளது.
இதையடுத்து ஹூசேனைத் தவிர மற்ற 4 எம்பிக்களும் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.
பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஹூசேன், அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனது பெயரில் உள்ள ஹூசேன் என்ற வார்த்தை காரணமாகவே இந்தச் செயலை அமெரிக்கா செய்துள்ளது. நான் அமைச்சராக, எம்பியாக பல முறை அமெரிக்கா சென்று வந்துள்ளேன்.
இதற்கு முன்பு எனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. எனக்கு அந் நாட்டு அதிபர் ஒபாமா பக்ரீத் வாழ்த்து கூட அனுப்பியிருந்தார். என்றாலும் முஸ்லீம் என்பதால் என் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகத் தெரிகிறது என்றார்.
ஆனால், சில நிர்வாக சிக்கல்கள் காரணமாகவே அவருக்கு விசா வழங்க முடியவில்லை என்று வெளியுறவுத்துறையின் அமெரிக்க பிரிவிடம் அந் நாட்டு தூதரகம் விளக்கம் தந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் ஷாருக் கானை அந் நாட்டு அதிகாரிகள் பல மணி நேரம் காக்க வைத்து சிறப்பு சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
விதியை மீறி பறந்த ராஜ்நாத் விமானம்:
இந் நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தனி விமானத்தில் வந்தார்.
பின்னர் டெல்லி திரும்ப ராஞ்சி விமான நிலையம் வந்தார். அப்போது மோசமான வானிலை நிலவியதால் விமானம் கிளம்ப அனுமதிக்கப்படவில்லை.
ஆனாலும் அதையும் மீறி பைலட் விமானத்தை கிளப்பிவிட்டார். ராஜ்நாத் நிர்பந்தம் காரணமாகவே பைலட் விமானத்தை ஓட்டியதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், இதை பாஜக மறுத்துள்ளது.