அருப்புக்கோட்டை-தலித்களின் முளைப்பாரி ஊர்வலத்தில் மோதல்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுப் பாதையில் தலித் மக்கள் முளைப்பாரி ஊர்வலம் செல்ல முயன்ற போது அதை மற்றொரு தரப்பினர் தடுத்ததால் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை அருகே உள்ளது கஞ்ச நாயக்கன்பட்டி கிராமம். இங்கு தலித் மக்கள், கடந்த வியாழனன்று மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக முளைப்பாரி ஊர்வலம் செல்வதற்காக பொதுப் பாதையில் மின் விளக்குகள் கட்டினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தலித் மக்கள் கட்டிய அலங்கார வளைவை அகற்றினர்.
இந்த நிலையில், தலித் மக்கள் அப் பகுதியில் முளைப்பாரி ஊர்வலம் சென்ற போதும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேருக்கு கடும் காயம் ஏற்பட்டது.
அவர்களை சிகிசைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயம் அடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தலித்கள் 12 பேர் உள்பட 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மோதல் நடைபெற்ற கிராமத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி. சுகந்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். தாமஸ், ஆர்.சந்திரமோகன் மற்றும் எம். துரைசிங்கம், அண்ணாதுரை உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications