முழுக்க எக்கானமி வகுப்பு கொண்ட விமானங்கள் - ஏர் இந்தியா திட்டம்
மும்பை: வளைகுடா நாடுகளுக்கு முழுக்க முழுக்க எக்கானமி வகுப்புகளை மட்டுமே கொண்ட விமானங்களை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெரும் நஷ்டத்தில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் வருவாயை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு இயக்கி வரும் விமானங்களில் தற்போது உள்ள 2 வகுப்பு விமானங்களுக்குப் பதிலாக முழுக்க முழுக்க எக்கானமி வகுப்புகளை மட்டுமே அமல்படுத்த அது யோசித்து வருகிறது.
இதன் மூலம் பெருமளவில் பயணிகளை ஈர்க்க முடியும் என்று அது முடிவு செய்துள்ளது. இந்த மாத இறுதியில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில், பஹ்ரைன், தோஹா ஆகிய நகரங்களுக்கு முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த மார்க்கத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படும்.
இந்த நகரங்களுக்கு தற்போது ஏர்பஸ் ஏ 320 விமானங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை மாற்றி விட்டு முழுக்க எக்கானமி வகுப்புகளை மட்டுமே கொண்ட விமானங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த மார்க்கத்தில் எக்கானமி வகுப்புகளுக்குத்தான் அதிக அளவில் பயணிகள் வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றத்தைத் திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் பயணிகளுக்கும் பலன் கிடைக்கும், ஏர் இந்தியாவுக்கும் வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications