தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் - படையினர் உஷாராக இருக்க பிரதமர் கோரிக்கை
டெல்லி: நாட்டில் மீண்டும் பெரிய அளவில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது கவலை தருகிறது. எனவே படையினர் மிகுந்த உஷார் நிலையில் இருக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
முப்படைத் தளபதிகளுடன் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், இந்தியாவின் அண்டை நாட்டில் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. தீவிரவாத நடவடிக்கைளால் அங்குள்ள நிலைமை கவலை தருவதாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலுக்குப் பின்னர், காபூலில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது இந்தியாவின் மீது தீவிரவாதிகள் எந்த அளவுக்கு துவேஷமாக, எதிராக இருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துவதாக உள்ளது.
தீவிரவாதத்தை ஒடுக்கும் பணியில் மத்திய அரசுடன், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு, திறந்த மனதுடன் கூடிய சமூகத்தைக் கொண்டது. இதுவே பல நேரங்களி்ல் ஆபத்துகளுக்கு வழி வகுத்து விடுகிறது.
தீவிரவாதிகள் எத்தகைய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டாலும் அதை தடுத்து சமாளிக்க பாதுகாப்புப் படையினர் முழு உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றார் பிரதமர்.