3 ஜி ஏலம் - ராசாவுக்கு பாதுகாப்பு அமைச்சரவை முட்டுக் கட்டை!
இந்தப் பிரச்சினையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உடனடியாகத் தலையிட்டு, விரைவான ஏலத்துக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
2 ஜி மற்றும் 3 ஜி தொலைத் தொடர்பு சேவைகளை ஏலம் விடுவதில் பெருமளவு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததால், இந்த முறை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மட்டுமின்றி, தொடர்புடைய பிற துறை அமைச்சர்கள் அடங்கிய குழு பிரதமரிடம் கலந்தாலோசனை செய்த பிறகே ஏலம் விடுவதென முடிவெடுக்கப்பட்டது. குறைந்த பட்ச ஏலத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விஷயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையிலெடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி, அதிநவீன தொலைத் தொடர்பு அலைவரிசையை ஏலம் விட இந்தத் துறை இன்னும் அனுமதிக்கவில்லை. ரேடியோ அலைகளை கட்டுப்படுத்தி வைத்துள்ளது. பாதுகாப்புத் துறை இந்த ரேடியோ அலைகளை ரிலீஸ் செய்தால் மட்டுமே 3 ஜி தொலைத் தொடர்பு சேவை செயல்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 3 ஜியை ஏலம் விட்டு ரூ.35000 கோடி திரட்டத் திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்புத் துறையின் கெடுபிடி காரணமாக இன்னும் இந்த ஏலம் தாமதமாகும் எனத் தெரிகிறது.
"3 ஜி விலை நிர்ணயம், ஏல முடிவு போன்றவை அமைச்சர்கள் குழுவால், பிரதமரின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதை பாதுகாப்புத் துறை தடுத்து வைப்பது சரியல்ல.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். உலகம் 3 ஜிக்கு அடுத்த தொழில் நுட்பத்துக்கு தாவிவிட்ட நிலையில், நாம் இன்னும் 3 ஜியையே ரிலீஸ் செய்யாமல் நாள் கடத்துவது, நமக்குத்தான் பெரும் இழப்பை ஏற்படுத்தும். எனவே மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்" என்று அமைச்சர் ராசா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.