அணை- மத்திய அரசை எதிர்ப்பாராம் தங்கபாலு!
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு காங். துரோகம் செய்யாது. இதில் தமிழக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டால் அதை எதிர்ப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் துரோகம் செய்யாது. தமிழக விவசாயிகள் பக்கம்தான் தமிழக காங்கிரஸ் நிற்கும்.
தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே கேரள அரசு புதிய அணை கட்டுவதை எதிர்ப்போம். தமிழக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
இந்த பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு மாநில முதல்-அமைச்சர்களையும் அழைத்து பேசி சுமூகமான தீர்வு காணவேண்டும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தின் வாயிலாக கிடைத்திருக்கின்ற உரிமை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது. உச்ச நீதி மன்ற தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை என்பது எங்கள் குற்றச்சாட்டாகும்.
உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை கேரள அரசு நடைமுறை படுத்தும்படி மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். இது போன்ற உணர்வு பூர்வமான பிரச்சினைகளில் அவசரம் காட்டாமல் கேரள அரசு நடந்துகொண்டு இருக்கவேண்டும். முல்லை, பெரியாறு அணை பிரச்சினை குறித்து பிரதமரை சந்திக்கும்போது மீண்டும் எடுத்துக்கூறுவேன் என்றார்.
திமுக - காங்கிரஸ் குழுவின் இலங்கை பயணம் குறித்து அக்குழுவில் இடம் பெற்றிருந்த திருமாளவன் கூறியுள்ள கருத்து குறித்து தங்கபாலு கூறுகையில்,
அனைத்து நாடுகளும் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியிருப்பது அவரது கருத்தாகும். இலங்கை சென்ற 10 எம்.பி.க்களும் சேர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அறிக்கை கொடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மை. இது தொல்.திருமாவளவன் உள்பட அனைத்து எம்.பி.க்களுக்கும் ஏற்புடைய கருத்து ஆகும்.
இலங்கை அதிபர் ராஜபக்சே சர்வதேச போர் குற்றவாளி என்று தொல்.திருமாவளவன் கூறியதாக சொல்கின்றீர்கள். ஒவ்வொரு கட்சியும் தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு. மற்ற கட்சி தலைவர்கள் கருத்தை நான் சொல்ல முடியாது.
இலங்கை சென்ற தமிழக எம்.பி.க்கள் ராஜபக்சேவிடமே அல்லது அங்கு உள்ள எந்த தலைவர்களிடமோ எந்த பரிசு பொருட்களும் பெறவில்லை. பெற வேண்டிய அவசியமும் இல்லை என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications