எனது மாமாவை காதலிக்கவில்லை - அவர்தான் ஒரு தலையாக காதலித்தார்: கத்திக் குத்துப்பட்ட மாணவி
சென்னை: எனது மாமாவை நான் காதலிக்கவில்லை. அவர்தான் என்னை ஒரு தலையாக காதலித்து வந்தார். செல்போன் மூலம் மிரட்டினார். இப்போது எனது வாழ்க்கையை பாழ்படுத்தி விட்டார் என்று கூறியுள்ளார் வேலூர் வாலிபரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த மருத்துவக் கல்லூரி மாணவி மதியரசி.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்து வருபவர் மதியரசி. 2 நாட்களுக்கு முன்பு இவரை கல்லூரி வளாகத்திற்கு அருகில் வைத்து கலைவேந்தன் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். அதைத் தடுக்க முயன்ற மதியரசியின் தோழி ராணிக்கும் கத்திக் குத்து விழுந்தது.
போலீஸார் கலைவேந்தனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். காயமடைந்த ராணி குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆனார். மதியரசியின் வலது கை கட்டை விரல் கத்திக் குத்தில் துண்டிக்கப்பட்டு விட்டது. தற்போது அதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சேர்த்து விட்டனர்.
இந்த நிலையில் போலீஸாருக்கு மதியரசி அளித்துள்ள வாக்குமூலத்தில்,
என்னை கத்தியால் குத்திய கலைவேந்தன் எனக்கு தூரத்து உறவினர் ஆவார். அவரை இளம் வயதில் இருந்து காதலித்ததாக சொல்லியிருப்பது தவறானது. நான், அவரை காதலிக்கவே இல்லை. 6 மாதத்துக்கு முன்புதான் உறவினர் ஒருவர் இறந்த துக்க சம்பவத்தில் அவரை சந்தித்தேன்.
அப்போதுதான் அவர் தூரத்து உறவினர் என்று தெரிய வந்தது. அந்த சந்திப்புக்கு பிறகு அவரது பெற்றோர்தான் என்னை அவருக்கு பெண் கேட்டனர். எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. என்னை நன்றாக படிக்க வைக்கப் போகிறோம் என்றும், திருமணம் இப்போது நடத்தவில்லை என்றும் எனது பெற்றோர் கூறிவிட்டனர்.
ஆனால் கலைவேந்தன் செல்போனில் பேசி எனக்கு அடிக்கடி தொல்லை கொடுத்தார். அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். சென்னையில் 2 முறைதான் அவர் என்னை சந்தித்துள்ளார். அப்போதே உங்களை திருமணம் செய்ய முடியாது என்று நான் கூறிவிட்டேன். அவரை நான் காதலிக்கவே இல்லை.
கத்தியால் குத்தியபோது கூட முதலில் நான் அவரை கவனிக்கவில்லை. திடீரென்று வந்து என்னை தாக்கி விட்டார். அவரை முன்கூட்டியே பார்த்திருந்தால் இந்த சம்பவம் நடக்காமல் நான் தவிர்த்து இருப்பேன் என்றாராம்.
அதேபோல, மதியரசியின் பெற்றோரும் மதியரசி, கலைவேந்தனை காதலிக்கவில்லை என்றும், கலைவேந்தனுக்கு மதியரசியை திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி எதையும் தரவில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.